இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்துவது மாத்திரமன்றி, அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடுகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து குடியேறியுள்ள மலையக மக்கள் கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் சமூக மற்றும் பொருளாதார பணியை அவர்கள் ஆற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், மலையக மக்கள் ஆற்றிய சேவைக்கு உரிய கெளரவத்தை வழங்கும் வகையில், அவர்களை வேறு பிரஜைகளாக கருதாமல் இலங்கை மக்களாக ஒன்றிணைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
காணி உரிமை உட்பட கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதோடு, பிரஜைகள் என்ற வகையில் சிரமத்தை மாத்திரம் வெளிப்படுத்தாமல் அவர்கள் தமக்கான உரிமைகளையும் அனுபவிக்கும் தரப்பினராக வாழ்வதை காண்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
