Our Feeds


Monday, February 12, 2024

News Editor

பெண்களின் ஒத்துழைப்புடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்


 பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.ஆனால் குடும்ப பெண்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்களின் ஒத்துழைப்புடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் எனத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியல் ரீதியில் இதுவரை காலமும் கடைப்பிடித்த தவறான கொள்கையின் பிரதிபலனை இன்று ஒட்டுமொத்த நாடும் எதிர்கொள்கிறது. பொருளாதார ரீதியில் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

பொருளாதார பாதிப்பினால் குடும்ப பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தமது பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்குவது தாய்மார் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாகக் காணப்படுகிறது.அரச தலைவர்களின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் குடும்ப பெண்கள் நுண்கடன் திட்டம் ஒன்ற கோரப்பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்.

பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் மாத்திரமே குறிப்பிட முடியும்.மக்கள் மத்தியில் அவரால் குறிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை மேன்மேலும் நெருக்கடிக்குள்ளாகும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களிடமிருந்து சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. நாட்டை சீரழித்தவர்களுக்கு இந்த ஆண்டு தீர்மானமிக்கதாக அமையும்.பெண்களின் ஒத்துழைப்புடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »