Our Feeds


Tuesday, May 14, 2024

ShortNews Admin

நக்கிள்ஸ் மலைத் தொடரில் 23 இளைஞர் யுவதிகள் கைது


 கண்டி- மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைச்சாரலில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி இருந்த 23 இளைஞர் யுவதிகள் உண்ணஸ்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேற்படி பாதுகாப்பு வனப்பிரதேசத்தில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனுமதி இன்றி வனப்பிரதேசத்தில் பிரவேசித்து கூடாரம் அமைத்து அடுப்பு ஒன்றை உருவாக்கி தீ மூட்டியுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய ஒருவர் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் எனப் பலதரப்பினர் உள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.  இவர்கள் பண்டாரவல, கொழும்பு, பதுளை, கண்டி உற்பட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் முகப்புத்தகம் மூலம் இணைந்து மேற்படி விருந்துபசாரம் மற்றும் கச்சேரி நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

 

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

 

அதேநேரம் நக்கில்ஸ் மலைத் தொடரில் அடிக்கடி காட்டுத் தீ பரவல் ஏற்படுவதாகவும் அதற்கு தீயணைப்பு தொகுதிகள் பரவலாக்கப்பட வேண்டும் என பன்வில பிரதேச செயலாளர் நெரஞ்சன் சேனாதீர கண்டி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்-

 

பன்வில, மடுல்கல, தங்கப்பு, இரங்கலை , உண்ணஸ்கிரிய போன்ற பிரதேசங்களில் நக்கில்ஸ் மலைச்சாரலில் உள்ள காடுகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவுவதால் பாரிய மரங்கள் மற்றும் வன வளங்கள் சேதமடைகின்றன.

 

அப்படியான நேரங்களில் தீயனணப்பதற்காக வனவிலங்கு மற்றும் வனபரிபாலன திணைக்களத்தில் இருந்து அனுமதி பெற வேண்டியுள்ளது. அவ்வாறு அனுமதி பெறும் போது ஏற்படும் காலதாமதம் காரணமாக தீ கட்டுப்பாட்டை மீறி பாரிய சேதத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். எனவே ஆங்காங்கு தீயைக்கட்டுப்படுத்தும் வசதிகள் செய்யப்பட வேண்டும், இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »