மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக வீடுகளில் கூறிவிட்டு
நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் ஜோடியாக பொழுதுபோக்கிய இளைஞர் - யுவதிகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அவர்களின் பெற்றோரிடம் கையளித்த இரண்டு நாள் வேலை திட்டம் ஒன்றை நீர்கொழும்பு பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் செய்துள்ளது.நீர்கொழும்பு பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இணைந்து நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள், பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியேறிய நிலையில் வகுப்புகளில் பங்கேற்காமல் கடற்கரை பூங்காவில் நேரத்தை செலவழிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
அதேவேளை குறிப்பிட்ட இடத்தில் இருந்த புத்தளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் திரு.எரிக் பெரேராவின் பணிப்புரையின் பிரகாரம், பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதம பரிசோதகர் ஆர்.எம்.என். ரத்நாயக்க, பெண் பொலிஸ் பரிசோதகர் நதீஷா சமன்மலி, பெண் உப பொலிஸ் பரிசோதகர் எம். ஹாசிம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.