Our Feeds


Tuesday, May 28, 2024

ShortNews Admin

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான கணக்காளருக்கு மீண்டும் விளக்கமறியல்

 

நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான கணக்காளரை மீண்டும்  எதிர்வரும் ஜூன்  மாதம் 10 ஆம் திகதி வரை  14 நாட்கள் விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது  திங்கட்கிழமை (27) மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகநபருக்கு  மீண்டும் 14  நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம்  திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில்  மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின்  வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய  துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கணக்காளர் வசம் இருந்து  ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த சந்தேக நபர்  கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »