‘‘நாட்டில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நீண்டகாலம் அங்கம் வகிக்கும், கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்க வேண்டும்’’ என்று அந்தக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அந்தக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் நேற்று(24) இடம்பெற்றது. அதற்காக கட்சியின் நிறைவேற்று குழுவினருக்கும் அரசியலமைப்புச் சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யோசனை முன்வைக்கப்பட்ட கட்சியின் யாப்பு திருத்தங்களுக்கு அனுமதிபெற்றுக்கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கட்சியின் இலக்குகளுக்கு இணக்கம் தெரிவிக்கும், கட்சியுடன் இணைந்து ஒன்றாக பயணிக்கக்கூடிய, தமது கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளும் தலைவர்களுடன் ஒன்றாக பயணிக்க தாம் தயாராக இருப்பதாக கட்சி அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்கள் அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்ததாக அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவிக்கையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தெரிவு செய்யப்படும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளை பாதுகாக்கும், நாட்டை பாதுகாக்கும், கட்சியின் கொள்கைகளை மதித்து பாதுகாக்க கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார்கள்.
எங்களின் கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட சில தலைவர்கள் கட்சியை புறந்தள்ளி விட்டார்களோ என்ற மனவேதனை எங்களின் உறுப்பினர்கள், முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களிடம் இருக்கிறது.
எங்கள் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களால் பாதுகாக்க முடியாது என்பதை போன்று, எங்கள் தரப்பை பாதுகாப்பதற்காக இடத்தை அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை. எங்கள் கட்சியை பாதுகாக்க எங்களால் முடியும். கோட்டாவின் விடயத்தில் நாங்கள் எடுத்த தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.