இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு
சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது.இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.
அடுத்த மாதம், இதற்கான புர்ந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபடவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான, மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை விரைவாக செயற்படுத்த ஒப்புக்கொண்டதாகவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் ஊழல் குறைவாக இருக்கும். அத்துடன் இது மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளித்த இந்தியாவின் ஆதார் அட்டையைப் போன்றது என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை
இந்தியாவில் அரசுத் துறையின் மிகவும் வெற்றிகரமான டிஜிட்டல் மயமாக்கல் உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கீழ் வரும் டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகமும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமும் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்.
இது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்திய அரசாங்கக் குழு அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளது. இதன்படி, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஆரம்பமாகும் முதல் இந்திய முதலீட்டுத் திட்டம் இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.