இ-கடவுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்னும் 8 மாதங்களில் இ-பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது சாதாரண முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
10 இலட்சம் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார்.
இதேவேளை, உத்தேச 24 மணித்தியால வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பில் 186 குடிவரவு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பரீட்சையை நடத்துவதற்கான திகதியை வழங்குமாறு பரீட்சை திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.