கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக துப்பாக்கிதாரிக்கு உதவிய இஷாரா செவ்வந்தி தற்போது தலைமறைவாகியுள்ளதால் அவரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி இன்னும் தேவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
உலகில் எந்தவொரு பொலிஸாராலும் குற்றங்களை மட்டும் கட்டுப்படுத்த முடியாது, அதற்கு பொதுமக்களின் ஆதரவும் தேவை என்று சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்திலும், அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகவும், இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.