Our Feeds


Tuesday, April 29, 2025

Zameera

பொய்யான தகவல்களை பரப்பிய 6 சமூகவலைத்தள கணக்குகள் தொடர்பாக விசாரிக்க CID யினருக்கு நீதிமன்றம் அனுமதி


 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி இன்று (28) அனுமதி வழங்கியுள்ளார்.



நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, குறித்த சமூக ஊடக கணக்குகளுக்கு ஒன்பது கேள்விகளை அனுப்பி, அதற்கு தொடர்புடைய பதில்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு புலனாய்வு பிரிவு கோரியிருந்தது.


இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


நாட்டில் பரவலாகப் பேசப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் தனக்கும் அவதூறு விளைவிக்கும் வகையில், குறித்த சமூக ஊடக கணக்குகளில் பொய்யான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதாக நீதிபதி தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், இதற்காக தனது உத்தியோகபூர்வ உடையுடன் கூடிய புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »