நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியான பிற்பகல் நேரத்தில் கன மழை பெய்து வருகின்றது.
இன்று (28) திங்கட்கிழமை பெய்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன.
அத்துடன், பிரதான வீதிகள் சில மழை நீரினால் நிரம்பியுள்ளதுடன், நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து சில மணித்தியாலயத்திற்கு மேல் முற்றாக துண்டிக்கப்பட்டது.
இதேவேளை நுவரெலியா - உடப்புசல்லாவ நுவரெலியா ஹட்டன் பிரதான வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டது.
மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் , கிளாரண்டன் ,கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன
இதில் குறிப்பாக அதிக மழை வீழ்ச்சி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதில் நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் நுவரெலியா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது ,
அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக உள்ளது பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.