வொஷிங்டன் சென்ற இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் சந்தித்து பேசவில்லை. கீழ்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதால் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. நாடு என்ற ரீதியில் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளும் தயராகவே உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வொஷிங்டன் சென்ற இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் சந்தித்து பேசவில்லை. கீழ்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதால் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. நாட்டில் பல்வேறு தொழிற்துறைகளில் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளது.
இந்த பிரச்சினை ஒருபுறமிருக்க மறுபுறம் தேசிய பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நாளாந்தம் நாட்டின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன. அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிட்டது. குற்றப்புலனாய்வு பிரிவினர் முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றனர்.
இந்த அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சும் நாட்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. குற்றப்புலனாய்வு திணைக்களம் மாத்திரமே செயற்படுகிறது. அதுவும் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் வேலைகளை மாத்திரமே முன்னெடுக்கிறது. அதன் காரணமாகவே இன்று நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் போன்றவை அதிகரித்துள்ளன.
நாட்டின் தேசிய உற்பத்தி பொருளாதார வளர்ச்சி வேகமானது அமெரிக்க வரி அதிகரிப்பிற்கு முன்னதாகவே 5 சதவீதத்ததிலிருந்து 3.9 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது 3.4 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலிருப்பவர்களைத் தவிர ஏனைய அனைவரும் கள்வர்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் அரசாங்கம் எவ்வாறு இந்த நிலைமையை கையாளப் போகிறது? ஆனால் நாடு என்ற ரீதியில் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளும் தயராகவே உள்ளன என்றார்.