Our Feeds


Friday, April 25, 2025

ShortNews

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது - சஜித்.



அரசாங்கத்தைப் பொறுத்தவரை பலஸ்தீன மக்களின்

உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்றே கருதி செயற்பட்டு வருகிறது. பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது இங்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பேருவளை பிரதேசத்தில் நேற்று  புதன்கிழமை (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு  தெரிவித்தார்.


அங்கு மேலும் உரையாற்றிய அவர்,


பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படும்போது, பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது, இந்நாடுகள் இரண்டும் ஒற்றுமையோடும் நல்லிணக்கத்தோடும் இருக்க வேண்டும் என்பதையே முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி இந்தக் கொள்கையையே ஏற்றுக்கொள்கிறது.  


அண்மையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்து ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் ஆளுந்தரப்பினர் பேசி, குரல் எழுப்பி வந்தபோதிலும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு இவ்வாறே நடந்து கொள்கின்றனர்.


அரசாங்கத்தின் பேச்சு ஒருவிதமாகவும், அதன் நடவடிக்கைகள் வேறு விதமாகவும் அமைந்து காணப்படுகின்றன. வெறும் வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யுரைத்தவர்கள் கூறிய பிரகாரம் நடந்து வருகிறார்கள் இல்லை. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, பலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்றே கருதி செயற்பட்டு வருகிறது. பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவ்வாறே காணப்படுகின்றன. அவ்வாறு செய்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும். பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே நாட்டினதும் மக்களினதும் கருத்தாகும். பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் இரட்டை நிலைப்பாடுகள் இன்றி முன்நிற்க வேண்டும்.


ஐக்கிய மக்கள் சக்தி வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு அப்பட்டமான அறிக்கைகளையும் பொய்களையும் வெளியிடும் கட்சி அல்ல. கொள்கை ரீதியான அரசியலையும், நிலையான கருத்துக்களின் அடிப்படையிலும் செயல்படும் கட்சியாகும். பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதற்கு இந்நாட்டு மக்களுக்கு காணப்படும் உரிமையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என்பது குறித்து நாம் கேள்வி எழுப்புகிறோம்.


நல்லிணக்கம் தொடர்பில் பேசும் அரசாங்கம் இன்று பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் அவர்களின் பார்வையில் பிழையான செயலாக மாறியுள்ளது. இந்நாட்டில் எதேச்சதிகார ஆட்சி நடைபெற்று வந்த காலப்பிரிவில், கோட்டாபய ராஜபக்ஷ முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பலவந்தமாக மீறி நடந்து கொண்டார். தகனமா அடக்கமா என்ற பிரச்சினையின் போது முஸ்லிம் மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே அதனை எதிர்க்க முன்வந்தது. இன்று ஆட்சி செய்பவர்கள் இந்த பிரச்சினை எழுந்த காலப்பிரிவில் வாய் மூடி மௌனம் காத்து வந்தனர்.


சர்வாதிகார ஆட்சி அமுலில் இருந்த போதும் இன, மத வேறுபாடுகளை புறமொதிக்கி வைத்து விட்டு, கொள்கை ரீதியான சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது. ஐக்கிய மக்கள் சக்தி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக செயல்படவில்லை.


தற்போதைய அரசாங்கத்தைப் போன்று பொய்யுரைக்கும் கேடுகெட்ட அரசியலில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடாது. தகனமா அடக்கமா என்ற விவகாரம் தொடர்பிலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் சமகாலத்திலும் கூட ஐக்கிய மக்கள் சக்தியினரான நாமே பாராளுமன்றத்தில் போராடி வருகிறோம்.


இன்றுவரை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கோ, சுற்றுலாத் துறையில் இருப்பவர்களுக்கோ இந்த அரசு எந்த நிவாரணங்களையும் வழங்கவில்லை. வழங்கிய வாக்குறுதிகளையும் கூட மீறியுள்ளனர். பழைய பொய்களையும், புதிய பொய்களையும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். வரவு செலவுத் திட்டத்தில் இல்லாதவற்றைக் கூட தெரிவித்து வருகின்றனர் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »