Our Feeds


Monday, April 21, 2025

Sri Lanka

சஜித் “டைமிங்“ கேள்வி | ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எங்கே? - இன்று அறிவிப்பதாக கூறிய ஜனாதிபதி - என்ன ஆனது?



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார்  என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மாத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாக்குப்போக்குகளை கூறிய இந்த அரசாங்கம், இன்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாக்குப்போக்குகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அரசியல் களத்தில் முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம், சமூக ஜனநாயகம் என பல்வேறு கோட்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் சமீபத்தில் இணைந்ததோர் கோட்பாடு தான் பொய்யும் பாசாங்குத்தனமுமாகும். ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பொய்யான கோரிக்கைகளை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான திசைகாட்டி அரசாங்கம், தற்போது புதிய கூற்றுக்களை முன்வைத்து, முட்டாள்தனமாக பிரஸ்தாபிக்கும் அரசாங்கமாக மாறியுள்ளது. நாட்டு மக்களை ஏமாற்றும் அரசாங்கம் இன்று செய்வதறியா அரசியலை முன்னெடுத்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


திஸ்ஸமஹாராம பி்ரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு  தெரிவித்தார்.


33% ஆல் மின் கட்டணத்தை குறைப்போம் என வாக்குறுதி வழங்கியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிற்பாடு இன்னும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என்றனர். இதனால் பொதுமக்கள் கொந்தளித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நாடிய போது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 20% ஆல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது. இந்த மின்சார கட்டண குறைப்பை அரசாங்கமோ ஜனாதிபதியோ எடுக்கவில்லை. எஞ்சியுள்ள 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்த பொய், திருட்டு, ஏமாற்றுதல் போன்றவற்றால் தொடர்ந்தும் நாம் ஏமாறுவதா இல்லையா என்பதை இந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆளுந்தரப்பினர் பழைய பொய்களோடு புதிய பொய்களையும் முன்வைத்து வருகின்றனர். வரவுசெலவுத் திட்டத்தில் கூட இல்லாத சலுகைகளை வழங்குவதாக பொய் சொல்கிறார்கள் என்றார். R

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »