மியன்மாரின் மியாவடியில் உள்ள சைபர்குற்றவியல் மையங்களில் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ள மேலும் 15 இலங்கையர்கள் நாளை (6) நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர்.
இலங்கை வெளியுறவு அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, இந்த பணியை மேற்பார்வையிட மியன்மார் தூதரகம் இன்று(5) தாய்லாந்தின் மே சோட்டுக்கு ஒரு அதிகாரியை அனுப்பியுள்ளது.
தாய்லாந்திலிருந்து மீட்கப்படவுள்ள நபர்களுக்குரிய விமான டிக்கெட்டுகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட முழு ஆதரவையும் வழங்க சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) முன்வந்துள்ளது.
தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் (MFA), தக் மாகாண ஆளுநர் மற்றும் தாய்லாந்தின் குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை மார்ச் மாதத்தில், மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், மியன்மாரின் மியாவடியில் உள்ள சைபர் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சரகம் உதவியமையும் குறிப்பிடத்தக்கது.