Our Feeds


Thursday, May 29, 2025

SHAHNI RAMEES

அரசாங்கம் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் காரணமாகவே மேயரின் பெயரை வெளியிடாமல் இருக்கிறோம்! - முஜிபுர் ரஹ்மான்

 
\

கொழும்பு மாநகரசபையின் மேயராக நகரசபையில் பல வருடங்கள் உறுப்பினராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ஒருவரையே பெயரிட இருக்கிறோம். ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் காரணமாகவே மேயரின் பெயரை வெளியிடாமல் இருக்கிறோம் என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் மேயராக பெயரிடப்போகும் நபரின் பெயரை வெளிப்படுத்தாமல் இருப்பற்கான காரணம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி செய்ய  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு அரசாங்கம்  தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களை பெற்ற  கட்சி என்றவகையில் நாங்களும் முயற்சித்து  வருகிறோம். 

இந்தமுறை தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மொத்தமாக  119 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன, அதில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு  48 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  நகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு மொத்தமாக 59  ஆசனங்கள் தேவையாகும்.


அதனால் அரசாங்கம் சுயாதீன  குழுங்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு  ஆட்சி அமைப்பதாக அவர்களில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.சுயாதீன குழுக்களில் மொத்தமாக 9 ஆசனங்களே இருக்கின்றன. அவர்கள் அனைவரின் ஆதரவை பெற்றுக்கொண்டாலும் அரசாங்கத்துக்கு ஆட்சி அமைக்க முடியாது.

அதேநேரம் உள்ளுராட்சி மன்றங்களை பொறுத்தவரை அங்கு எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. சபைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து நகரத்தின் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக  சபைக்கு ஒரு தலைவரை அனைவரும் சேர்ந்து நியமித்துக்கொள்ள வேண்டும். சபைக்கு தலைவராக நியமிக்கப்படுபவர், அந்த சபை தொடர்பில் சிறந்த அனுபவம் உள்ள, சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமான துடிதுடிப்பான ஒருவராக இருக்க வேண்டும். 

அந்த வகையில் கொழும்பு மாநகர சபைக்கு தேசிய மக்கள் சக்தி பெயரிட்டிருக்கும் மேயர் மாநகரசபை அரசியல் தொடர்பில் அனுபவம் உள்ள ஒருவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனால் கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து  ஒரு மேயரை நாங்கள் பெயரிடுவோம். அவர் இந்த மாநகர சபையில் 20 வருடங்கள் வரை உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். நகரசபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நல்ல அனுபவம் உடையவர்.


அதனால் நாங்கள் பெயரிடும் மேயரை எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு  இருக்கிறது.எமது மேயரை பெயரிடுமாறு அரசாங்க தரப்பினர் தொடர்ந்து எமக்கு சவால் விட்டு  வருகிறார்கள்.

ஆனால் தற்போதைக்கு நாங்கள் அதனை வெளியிடுவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தில் இருக்கும் பிரதி அமைச்சர் ஒருவர் இரவு பகலாக மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆதரவளிக்குமாறும் அதற்காக பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து வருகிறார்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் வெளிப்படையாக எதை தெரிவித்தாலும் திரைக்கு பின்னால் அவர்களின் அவர்களின் நடவடிக்கைகள் வேறுவிதமாகவே இடம்பெற்று வருகின்றன.  அதனால் அரசாங்கத்தின் சதித்திட்டங்கள் காரணமாக எமது பேயர் யார் என்பதை வெளிப்படுத்துவதை நாங்கள் தவிர்த்து வருகிறோம். இன்னும் ஒருசில நாட்களில் வெளிப்படுத்துவோம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »