ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், ஓமான் மற்றும் இந்தியா போன்ற பாதிக்கப்படாத நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம் பார்க் போன்ற பிற விநியோகஸ்தர்களும் தடையற்ற விநியோகங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மசகு எண்ணெய் இறக்குமதி நிலையானதாக உள்ளதுடன், முழு ஆண்டுக்குமான கொள்வனவு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், எரிபொருள் பற்றாக்குறை அல்லது விலை உயர்வு குறித்த சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சந்தையில் விலை நிலையானதாக இருப்பதாகவும், அடுத்த மாதம் விலை உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.