Our Feeds


Monday, June 2, 2025

SHAHNI RAMEES

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஆளுங்கட்சி முயற்சி! - பொதுஜன பெரமுன

 


ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு

ஆட்சிக்கு வந்த தேசிய  மக்கள் சக்தி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் மேயர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


வாழ்க்கைச் சுமை சடுதியாக உயர்வடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரச்சார மேடைகளில் வாழ்க்கை செலவுகள் பற்றி தீவிரமாக பேசியது. ஆட்சிக்கு வந்தவுடன் வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் வாழ்க்கைச் செலவுகள் குறைக்கப்படவில்லை.


மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. நிறைவடைந்துள்ள 6 மாத காலத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் விருத்திக்கான நடைமுறைக்கு சாத்தியமான புதிய கருத்திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் எவ்வாறு நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.



தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொய் மற்றும் வெறுப்பினை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. அரசாங்கத்தின் உண்மை தன்மையை மக்கள் ஆறு மாத காலத்துக்குள் விளங்கிக் கொண்டார்கள். இதனால் அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்தது. இதனால் தான் அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறவில்லை.


கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சி அமைப்பது என்பது இழுபறி நிலையில் உள்ளது. ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.


கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரியது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கான சிறந்த திட்டங்களை முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் முன்மொழியும் மேயர் வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »