Our Feeds


Saturday, August 2, 2025

SHAHNI RAMEES

விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட, தமிழர்களும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம்!

 



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர்

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவா முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகம் காணப்படுகிறது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.


முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,


முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் முப்படையினர் சட்டத்துக்கு விரோதமான முறையில் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.


இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும்போது அவர்களை சிறைச்சாலையில் ஏனைய கைதிகளுடன் ஒன்றாக அடைக்காமல், வீட்டுக்காவலில் வைக்க முடியும். ஆனால் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் தளபதி ஏனைய கைதிகளுடன் ஒன்றாக சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.


கடத்தி காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் தான் கடற்படையின் முன்னாள் தளபதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவா முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகம் காணப்படுகிறது.


செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் அமைப்பினர் சித்திரவதை முகாம்களை நடத்தினர். விடுதலை புலிகள் அமைப்பில் இணைவதற்கு இணக்கம் தெரிவிக்காத தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »