ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சென்று பார்த்துள்ளார். தன்னை அரசியலுக்குள் கொண்டு சென்ற தலைவரைப் பார்க்கச் சென்றதாக ஊடகங்களிடமும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலைப் பார்த்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா, என்னை அரசியலுக்குக் கொண்டு சென்ற நாம் மதிப்பளிக்கும் எமது முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பார்ப்பதற்காகச் சென்றேன். அவர் ஆரோக்கியமாக இருக்கின்றார்.
கோபம் மற்றும் பழிவாங்கும் அரசியல் நாட்டுக்கு பொறுத்தமானதல்ல. இவ்வாறான அரசியலால் சமூகத்திலுள்ள பிரிவினைவாதம் மேலும் அதிகரிக்கும். பிரிவினைவாதங்களை சரி செய்வதை விடுத்து அவற்றை மேலும் ஊக்குவிப்பதானது நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கும் எனத் தெரிவித்தார்.
