செம்மணி போன்ற பாரிய மனித புதைகுழிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்விற்கு உட்படுத்துவதற்கு சர்வதேச நிபுணர்களின் உதவி தேவைப்படலாம் என தெரிவித்துள்ள அரசாங்கம் ஆனால் வேறுவகையான சர்வதேச தலையீடு தேவையில்லை என தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெறும் அகழ்வு நடவடிக்கைகளிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கிவருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய ஒருங்கிணைப்பு விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் முனீர் முலாபர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளிற்கு சர்வதேச உதவி தேவை என வடக்கின் சில குழுக்கள் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளன,என தெரிவித்துள்ள அவர் தற்போதைய அரசாங்கம் இந்த அகழ்வு தொடர்பில் எந்த தடங்கல்களையும் தடைகளையும் ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையான விசாரணைக்கான சூழ்நிலை ஏற்கனவே உள்ளது,எங்களிற்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்பட்டால் உதாரணத்திற்கு எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கு அல்லது மேலதிக நவீன தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அது குறித்து ஆராய்வதற்பு நாங்கள் தயார் என தெரிவித்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் முனீர் முலாபர் இதனை தவிர வேறு சர்வதேச தலையீடுகளிற்கு அவசியமில்லை ஏனென்றால் நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.
