Our Feeds


Sunday, September 28, 2025

Admin

மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளது - காவிந்த ஜயவர்தன!


மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. அந்த பிரதேச மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை வன்மையாக கண்டித்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

மன்னார் காற்றாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அதானி நிறுவனத்துடனான மன்னார் காற்றாலை திட்டத்தை கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டது.இந்த கருத்திட்டத்தில் இருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. இந்த கருத்திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் சிவில் தரப்பினர்கள் தொடர்ச்சியாக வழியுறுத்தி வருகிறார்கள்.

இலங்கையின் மிகபெரிய தீவாக கருதப்படும் மன்னார் தீவின் இயற்கை அம்சங்களை பாதுகாக்க வேண்டும். மன்னார் காற்றாலை  கருத்திட்டத்தை  மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிப்படையான வகையில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் எவ்விதமான பேச்சுவார்த்தைகளுமின்றி கருத்திட்டத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. அந்த பிரதேச மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை வன்மையாக கண்டித்தக்கது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது காலம் கடத்தப்படுகிறதே தவிர உறுதியான பதிலேதும் கிடைப்பதில்லை.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயம் தயாரிக்கும் வரைவினை புதிய அரசியலமைப்பாக அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அரசாங்கம் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் வழங்கி வாக்குறுதி போலியாக கூடாது. யாப்புருவாக்கத்துக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »