பாடசாலைகள் அல்லது ஆசிரியர்களையோ இலக்கு வைத்து சிறுவர்கள் தண்டனை சட்டமூலம் திருத்தப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், ழுழு சமூகத்திலும் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது வெறும் பாடசாலை சார்ந்த பிரச்சினை அல்ல எனவும் மாறாக, சிறுவர்களுக்கு வழங்கப்படும் உடல் மற்றும் மன தண்டனை தொடர்பான பிரச்சினை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாத்திரமல்லாமல், காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்ட சிறுவர்கள், நிறுவனமயமாக்கப்பட்ட சிறுவர்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள சிறுவர்கள் உட்பட அனைத்து சிறுவர்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
அத்துடன், இது உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சமூகத்தில் பெரியவர்கள் அல்லது பொறுப்பான நபர்களால் அந்த சிறுவர்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறை குறித்துப் பல பாரதூரமான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
ஆகவே, இந்த சட்டத்திருத்தம் பாடசாலைகள் அல்லது ஆசிரியர்களைக் குறிவைத்துச் செய்யப்பட்ட திருத்தம் அல்ல.
இது ஒட்டுமொத்த சிறுவர்களின் தண்டனை குறித்த திருத்தம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போது சிறுவர்களைத் தண்டிக்க முடியாது என்றும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கு அவர்களைத் தண்டிக்கவே முடியாது என்றும் கூறுகின்றார்.
அவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்கள் நிறுத்தவில்லை. ஒரு சமூகமாக, சிறுவர்களைத் தண்டிக்க ஒரே வழி அவர்களை உடல் ரீதியாக சித்திரவதை செய்வது அல்லது மன ரீதியாக அவர்களைச் சிதைப்பதல்ல என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறுவரை அவமானப்படுத்தாமல், சித்திரவதை செய்யாமல், அழுத்தம் கொடுக்காமல் தண்டிப்பதற்குப் பல வழிகள் இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
