எல்லவில் நேற்றிரவு இடம்பெற்ற பயங்கர பேருந்து விபத்தில் உயிர் தப்பிய ஒருவர், விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஓட்டுநர் பிரேக் பழுதடைந்ததாக தெரிவித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர், தான் ஓட்டுநருடனும், நடத்துனருடனும் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு வளைவை எடுக்கும்போது ஓட்டுநர் பிரேக் பழுதடைந்ததாக கூறியதாக தெரிவித்தார்.
“ஆனால், அவரது கருத்தை நடத்துனரும், அருகில் இருந்த பயணிகளும் சிரித்து புறக்கணித்தனர். இரண்டாவது வளைவை எடுக்கும்போது, பிரேக் இல்லை என்பது எங்களுக்கு உறுதியானது. பின்னர், எதிரே வந்த வாகனத்துடன் பேருந்து மோதியது. அதன்பின், ஆயிரம் அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. நான் சுமார் ஒரு மணி நேரம் மயக்கமாக இருந்தேன். ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு மயக்கம் தெளிந்தேன். ஆனால், என்னால் அசைய முடியவில்லை. பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் வந்து எங்களை மீட்டனர்,” என்று அவர் விவரித்தார்.
பாதிக்கப்பட்டவர் பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்றிரவு, வெள்ளவாயை நோக்கி பயணித்த பேருந்து, ஜீப் வாகனத்துடன் மோதி ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்ததில், 15 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவர்.
காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்காலையிலிருந்து எல்லவுக்கு
பயணமாக சென்றிருந்த இந்தக் குழுவினர், திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
