பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
உள்நாட்டு போர்
மேலும் அவரது உரையில், “நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் போரை நிராகரிக்கும் என்னுடைய கருத்துக்கு உடன்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரின் கசப்பான அனுபவங்களை கொண்ட நாடாக அதன் அழிவுகளை நாம் நன்கு அறிவோம்.
போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுச் சின்னங்களுக்கு வந்து, அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவிகள் கைகளை கூப்பி எழுப்பும் வேதனை வேண்டுகோள்களைக் பார்க்கும் எவரும், போரை கனவில் காணக்கூட விரும்ப மாட்டார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் கண்களால் பார்த்திருக்கிறோம்.
