Our Feeds


Wednesday, October 22, 2025

Zameera

சீரற்ற வானிலையால் 8000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு


 சீரற்ற வானிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 335 ஆகும். 

இதற்கிடையில், அவிசாவளை - மடோல பகுதியில், நேற்று பிற்பகல் பெய்த கனமழையின் மத்தியில், பயிற்சி வகுப்புகளில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​வடிகாலில் விழுந்து சுமார் 80 மீட்டர் தூரத்துற்கு நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது மாணவி இன்று உயிரிழந்தார். 

அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். 

இன்று இரவு மற்றும் நாளையும் (22) நாட்டின் பல மாகாணங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை, அடுத்த 12 மணி நேரத்திற்குள் குறைந்த அழுத்த நிலையாக உருவாக வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களைப் போலவே, நாட்டின் பல பகுதிகளில் நேற்று இரவும் இன்று பிற்பகலும் மழை பெய்தது. 

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைப்பொழிவு காலி - சிறிகந்துர தோட்டத்தில் பதிவாகியுள்ளது. 

அங்கு 241 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது. 

இதேபோல், காலியின் மொன்ரோவியா பகுதியில் 229.2 மி.மீ. மழையும், காலி - பலபிட்டிய பகுதியில் 178.6 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மி.மீ.க்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதுடன், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளன. 

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும், கலாவெவயின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

மேலும், குருநாகல் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் கண்டி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 03 வான் கதவுகளும் இன்னமும் திறக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், மொனராகலை அலிகொட்டார நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், மாத்தளை இப்பன்கடுவ நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளும், குருநாகல் கிம்புல்வானா ஓயாவின் 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், மகா ஓயா நீரேந்து பகுதிகளில் பெய்யும் மழையைக் கருத்தில் கொண்டு, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

தெதுரு ஓயாவில் நீர் மட்டம் உயர்வதால் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம் உள்ளிட்ட தாழிநில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பசறையிலிருந்து பிபில, லுனுகலை மற்றும் மொனராகலை வரையிலான வீதியில் 13வது கிலோமீட்டர் தூணை அண்டிய பகுதியில் மூன்றாவது முறையாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கண்டியில் உள்ள தொடம்பளையிலிருந்து அஸ்கிரிய வரையிலான குறுகிய வீதியின் ஒரு பெரிய பகுதி அருகிலுள்ள சனச அலுவலகத்துடன் தாழிறங்கியுள்ளது. 

வீதியின் இந்தப் பகுதி படிப்படியாக தாழிறங்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காலி - அக்மீமன பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்துள்ள போதும், அதனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. 

இதற்கிடையில், இன்று காலை பொகவந்தலாவ கேம்பியன் தோட்டத்தில் வீசிய பலத்த காற்றில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், தோட்டத்தின் கூட்டுறவு கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. 

இதற்கிடையில், களுத்துறை, தெபுவன, பஹல நெபட பகுதியில் ஒரு வீட்டின் சமையலறையின் கூரை மற்றும் சுவர் இன்று பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. 

குடியிருப்பாளர்கள் யாரும் காயமடையவில்லை. 

இதற்கிடையில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இஹல கோட்டே பகுதியில் ஏற்பட்ட மண்சரிசால் தடம்புரண்டதில் மலையக ரயில் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில், மலையக ரயில் போக்குவரத்தை நாளை நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு கொண்டு வர முடியாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, இன்று இரவு நேரல் தபால் ரயில் சேவைகள் இயங்காததுடன், கொழும்பிலிருந்து இயங்கும் ரயில் சேவைகள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில் சேவைகள் பேராதனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இராணுவத்தின் உதவியுடன் ரயில் பாதை இன்று சீரமைக்கப்பட்டு வருகிறது. 

தற்போது நிலவும் சூழ்நிலையில் 11 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. 

இதற்கிடையில், மழையுடனான வானிலை காரணமாக இன்று பல பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 

கனமழை காரணமாக பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை காரணமாக கொழும்பு நகரின் பல வீதிகள் இன்று காலை நீரில் மூழ்கின. 

இதன் விளைவாக சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »