முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் சமர்ப்பித்த அனைத்து மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பில், விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று (29) கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்று, அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இதன்போது, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பில், குறித்த அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், லண்டனுக்கான குறித்த பயணம் அதிகாரபூர்வ பயணமா என்பது தொடர்பில் விரைவாக விசாரித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, நவீன் திஸாநாயக்க மற்றும் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பல அரசியல் சகாக்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணைத் திகதி 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்று மேலதிக அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
