தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, கெஹெல்பத்தர பத்மேவை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானதாகும். பொலிஸ் தடுப்பு காவலில் இருக்கும் போது கெஹெல்பத்தர பத்மேவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த ரிட் மனு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பக்கோ சமனின்” மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
