சபையில் தூங்கியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதேநேரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (08) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இது மாவீரருக்கான மாதம் .எமது மாவீரர்களுக்கு இந்த உயரிய சபையில் மரியாதை தெரிவித்துக் கொண்டு எனது உரையை ஆரம்பிக்கிறேன். சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய வைத்தியசாலைகள் நிர்மாணிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். தொழில் முயற்சியாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கையில் வந்து தொழில் புரிவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. எமது தமிழ் உறவுகள் தமிழ் தேசத்த கட்டியெழுப்புவார்கள். நீங்கள் அதில் தலையீடு செய்ய வேண்டியதில்லை. சுதந்திரமாக அவர்கள் வருகை தருவதற்கு அனுமதித்தால் போதுமானது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிடுகின்றீர்கள். வடக்கு மாகாணத்தில் வைத்தியர்களான கேதீஸ்வரன், லியனகே, மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றீர்கள்.
பாராளுமன்றத்தில் சபையில் உறங்கியதற்கு மன்னிப்பு கோருகிறேன். வியாழக்கிழமை தான் நாட்டுக்கு வந்தேன். காலையில் மகனை பாடசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு பாராளுமன்றத்துக்கு வந்தேன். ஜனாதிபதியின் உரையின் போது உறங்கி விட்டேன். இது தேனிலவு காலம். ஆழகாக இருக்கும் ஆனால் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கடினமாக இருக்கும் என்றார்.
