Our Feeds


Wednesday, December 10, 2025

SHAHNI RAMEES

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை!

 

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான 55 ஹெக்டயார் நிலப்பரப்பில் இடம்பெயர்ந்தவர்களை குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்துள்ளார். 

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பது தொடர்பில் இநாட்களில் பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை எனவும், அறிவியல் ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் வான் கதவுகளைத் திறக்க கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே. ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

பணிப்பாளர் நாயகம் நேற்று (09) பிற்பகல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டைப் பார்வையிட்ட பின்னர், கொத்மலை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், எதிர்காலத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பதற்கு முன்னர் மக்களுக்கு அறிவிப்பதற்கு, தற்போது நடைமுறையிலுள்ள முறைமையை விட வேறு முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். 

பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளதால் நீர்த்தேக்க அணைக்கட்டின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நேற்று முதல் அணைக்கட்டின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தடைப்பட்டுள்ள வீதிகள் சீராகும் வரை இலகு ரக வாகனங்கள் மட்டுமே அணைக்கட்டின் மீது பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதேவேளை, கம்பளை - நுவரெலியா வீதி, இலகு ரக வாகன போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கட்டுகித்துல, ரம்பொடை நீர்வீழ்ச்சி மற்றும் தவலந்தென்ன ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், அவ்விடங்களில் வீதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »