Our Feeds


Friday, January 23, 2026

SHAHNI RAMEES

அனுராதபுரத்தில், வீடு கட்ட 50 இலட்சம் தர முடிந்தால், மலையக மக்களுக்கு ஏன் தர முடியாது? - மனோ கேள்வி

 

மலையகத்திலிருந்து, இன்று அவல குரல் கேட்கிறது!

அனுராதபுரத்தில், வீடு கட்ட 50 இலட்சம் தர முடிந்தால், ஏன் மலையக மக்களுக்கு அதே 50 இலட்சத்தில் காணி தந்து, வீடு கட்டி தர முடியாது? 

காணியை தோட்டங்களில் தான் பிரித்து, எடுத்து கொடுக்க வேண்டும். தோட்ட நிர்வாகம் இதை செய்யாது. அரசாங்கம் தான் தோட்ட நிலங்களுக்கு சொந்தகாரர். ஆகவே, அரசாங்கம் இதை செய்ய வேண்டும்.

அனுரவை, பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து, "நமது மக்களுக்கு காணி கொடுங்கள்" என நான்  கேட்டேன். அனுர, "காணி எங்கே இருக்கிறது?"  என என்னிடம் கேட்டார். நான் "காணி தோட்டங்களில் தான் இருக்கிறது" என அவருக்கு கூறினேன். 

ஆனால், நான் அன்று அதிர்ந்து போனேன். ஏனெனில், இதே சபையில், கடந்த காலத்தில், எதிர் கட்சியிலிருந்து, மலையக மக்கள் தொடர்பாக நான் கொண்டு வந்த முழுநாள் பிரேரணை விவாதங்களில், எமது காணி உரிமை தொடர்பில் அனுர உரையாடி  உள்ளார். 

தித்வா பேரழிவுக்கு  பின்னரான, மீள்கட்டெழுப்பல் ஸ்ரீலங்கா, வீடமைப்பு செயற்பாட்டில், மண்சரிவால், அதிகமாக பாதிக்க பட்ட கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை, மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு, ஏன் பாரபட்சம் காட்ட படுகிறது? 

வீடு சுத்த படுத்தும் கொடுப்பனவு,  பாடசாலை பிள்ளைகளுக்கான கொடுப்பனவு, மற்றும் அழிந்து போன காய்கறி, கால்நடை, சிறு கடை, துறைகள் சார்ந்த மக்களுக்கான கொடுப்பனவு, எல்லாவற்றிலும், மலையக மக்களுக்கு பாரபட்சம் காட்ட பட்டுள்ளது என்பதை மிக  பொறுப்புடன் கூறுகிறேன். 

ஜனாதிபதி அனுரகுமார இங்கே சபைக்கு  வந்து அழகாக, அலங்காரமாக, பேசுகிறார். ஆனால், ஜனாதிபதியின் உறுதி மொழிகள், எமக்கு நிவாரணமாக, காணியாக, வீடாக, பிரதேச செயலாளர், கிராம சேவகர், NBRO அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், ஊடாக கிடைப்பதில்லையே? இவர்கள் இடம் பெயர்ந்த எமது மக்களை, அவர்களின் பழைய இருப்பிடங்களுக்கு  விரட்டுகின்றனர். 

ஆனால், பழைய வீடுகளின் சுவர்கள் இடிந்து போயுள்ளன. குடியிருப்புகளுக்கு மேலே  மலை மேடுகள் நிற்கின்றன. குன்றுகள் இருக்கின்றன. அடுத்த பெரும் மழையில், அவை கீழே வரலாம் என எமது மக்கள் அஞ்சுகின்றனர். 

இந்நிலை, ஏன் என தேடி பாருங்கள்!

அப்படியானால், அனுரகுமார, "வாயால் வடை சுடுகிறாரா?" என கேட்க விரும்புகிறேன். 

இங்கே, இப்போது, இந்த சபையில் இருக்கின்ற பிரதமர் ஹரினி அமரசூரிய , எனது இந்த கேள்விகளுக்கான பதில்களை, ஜனாதிபதியிடம் இருந்து பெற்று தர வேண்டும் என கேட்கிறேன். 

(சற்றுமுன் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சுருக்கம்) 

#மனோ_கணேசன் 
23-Jan-26-Parliament


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »