Our Feeds


Sunday, January 11, 2026

Zameera

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்கள்


 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் போலித் தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்கும், குறிப்பாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கும் தற்போதுள்ள சட்ட விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி Sunday Times செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திருத்தங்கள் மூலம் போலிச் செய்திகளை உருவாக்குபவர்கள் மாத்திரமன்றி, அத்தகவல்களைப் பயன்படுத்தி தனிநபர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை உருவாக்குபவர்களையும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது.

“பல சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் எந்தவித உறுதிப்படுத்தலுமின்றி செய்திகளாக ஒளிபரப்பப்படுகின்றன. இதன் விளைவாக தனிநபர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதுடன், அவர்களுக்குக் கடுமையான பாதிப்புகளும் ஏற்படுகின்றன” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தங்களை ஆராய்வதற்காக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இம்மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

மூலச் சட்டமூலத்தில் காணப்பட்ட பல பலவீனங்களுக்கு இந்தப் புதிய திருத்தங்கள் ஊடாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »