Our Feeds


Saturday, January 3, 2026

Zameera

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மனசாட்சிக்கு இனங்க செயற்பட்டார்கள் - விராய் கெலி பல்தசார்


 (எம்.ஆர்.எம்.வசீம்) 

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மனசாட்சிக்கு இனங்க செயற்பட்டார்கள். அதன்மூலம் கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை அனுமதித்துக்கொள்ள முடியுமாகியது என கொழும்பு மாநகர சபை மேயர்  விராய் கெலி பல்தசார் தெரிவித்தார். 

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வெற்றிகொள்ளப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம்  ஆரம்பமாக கடந்த மாதம் 22ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்திருந்தோம். மக்கள் மயமான வரவு செலவு திட்டம் ஒன்றையே சமர்ப்பித்திருந்தோம். என்றாலும் நாங்கள்  எதிர்பார்க்காதவகையில் அன்றைய தினம் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நான் எமது உறுப்பினர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தேன். அதாவது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள், வீடுகளுக்கு சென்று, தாங்கள் எதிராக வாக்களித்தது மனசாட்சியின் பிரகாரம் சரியா என சிந்தித்து பாருங்கள் என தெரிவித்திருந்தேன்.

அதன் பிரகாரம் இரண்டாவது தடவையாக வரவு செலவு திட்டம் கடந்த 31ஆம் திகதி  சமர்ப்பித்தபோது, ஒருசில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆரம்பத்தில் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, மனசாட்சிக்கு இனங்க செயற்பட தீர்மானித்தார்கள். அதன் மூலம் எமக்கு வரவு செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியுமாகியது.

குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களில் 3பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் எமக்கு ஆதரவளித்ததுடன் ஒரு உறுப்பினர் எமக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அந்த பெண் உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்காகவே செயற்பட்டு, இந்த  தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு பெண்  என்ற அடிப்படையில் அவர் எடுத்த தீர்மானத்தை நான் வரவேற்பதுடன், அவர் எங்களுக்கு வழங்கிய ஆதரவுக்காக அவரின் தொகுதியை அபிவிருத்தி செய்ய எங்களால் முடியுமான நடவடிக்கையை மேற்கொள்ளவோம். அதுதான் அவருக்கு எங்களால் செய்ய முடியுமான உதவியாகும் என்றார்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றிபெற காரணமாக அமைந்தது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பாத்திமா  ஸொஹாரா  அளித்த வாக்காகும்.  அவர் அன்று எடுத்த தீர்மானத்தை  பாராட்டி நன்றி செலுத்துவதற்காக மேயர் பல்தசாரி, பாத்திமா ஸொஹாராவின் வீட்டுக்கு சென்று, அவருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »