காலி மாநகர சபையில் டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவரை பிணையில் விடுதலை செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது.
காலி மாநகர சபையின் மேயர் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி அவர் மீது தண்ணீரை தெளித்து “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.
குழப்பநிலை காரணமாக காலி மாநகர சபையின் மேயர் கூட்டத்தை இடைநிறுத்தி அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
இதனையடுத்து காலி மாநகர சபை மேயரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரும் புதன்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
