Our Feeds


Tuesday, February 10, 2026

SHAHNI RAMEES

கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் - நாமல் ராஜபக்ஷ!

 


எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத்

தயாராக உள்ளோம். வீணாகக் கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் போன்று மாகாண சபைத் தேர்தலையும் உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார். 


நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், 


அரசாங்கம் எதிர்க்கட்சிகளையும் மகா சங்கத்தினரையும் ஒடுக்கி, நாட்டின் கலாசாரத்தை சீரழித்து புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறலாம் என நினைத்தால் அது தவறு.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ராஜபக்ஷக்களுக்கு எதிராக அவதூறு பரப்ப சிவில் அமைப்புகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக தற்போது முன்னாள் அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 'கோப்புகள் மறைக்கப்பட்டுள்ளன' எனக் கூறியிருந்தார். இப்போது அந்த கோப்புகளுக்கு என்னவானது என்று அவற்றை எடுத்து வந்தவர்களிடமே கேட்க வேண்டும்.


பொலிஸாரையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி பொய்களை உண்மையாக்க முயற்சிப்பதாகவும், அது தோல்வியடையும் போது கோப்புகள் காணாமல்போனது என்று அரசாங்கம் புலம்புகிறது.


அத்துடன், திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரத்தில் தேரர்கள் கைது செய்யப்பட்டமை,  அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதிப்பதை சுட்டிக்காட்டுகிறது.


அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டமை தற்போது மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »