Our Feeds


Tuesday, February 17, 2026

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு!: ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளி காட்ட அரசாங்கம் முயற்சி

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும்

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னர் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்டி வழக்கை தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.


கொழும்பில், 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் ரீதியாக விற்பனை செய்து ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும், சூத்திரதாரிகளையும் வெளிப்படுத்துவோம் என்று வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று வரை அது பற்றிய எந்தவொரு அறிக்கையும் வெளிவிடவில்லை.


ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட அறிக்கை கடந்த கால அரசாங்கங்களை போல் தற்பொதைய அரசாங்கமும் சரியான முறையில் வெளிவிடுவதில்லை. இந்த அறிக்கை வெளியிடபடாமைக்கு இந்தியாவின் அழுத்தம் காரணமா அல்லது நாட்டின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமா என்று தெரியவில்லை. இந்த விடயத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க மக்கள் பல வருடங்களாக இதற்கு ஓர் முறையான தீர்வு வேண்டும் என்று போராடினார்கள்.



ஆனால் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னர் இந்த விடயத்தில் ஒரு தீர்ப்பை பெறுவதற்காக அரசாங்கம் அவசரமாக செயற்பட்டு வருகிறது. அதற்காக சட்ட ரீதியாக சில கட்டுப்பாடுகளை விதித்து எப்படியாவது ஒருவரை குற்றவாளியாக்க முயற்சிக்கிறது. ஆறு வருடங்களாக காத்திருந்தமைக்கு இப்படி யாராவது ஒருவரை குற்றவாளியாக்க முயற்சிப்பது முறையான தீர்வாகுமா? இவ்வாறு நீண்ட காலமாக போராடி வரும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்களும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் எதிர்ப்பார்க்கின்றார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »