Our Feeds


Tuesday, February 17, 2026

Zameera

பிரித்தானிய துணைப் பிரதமர் இலங்கையில்


 பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தார்.

 

டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர்.

 

தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17) காலை 09:11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

 

அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர்கள் அறைக்கு வருகை தந்திருந்தனர்.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானிய துணைப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 

இதன்போது, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

 

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் அந்த வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதும் துணைப் பிரதமரின் விஜயத்தின் நோக்கமாகும்.

 

மேலும், சிறுவர் பராமரிப்புக்கான பூகோள சாசனத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் இந்த விஜயத்தின் போது இடம்பெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »