Our Feeds


Monday, February 23, 2026

Zameera

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது


 ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்கள் 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய திப்பத்துகொட, ஹொரணை, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 


கொள்ளையிடப்பட்ட பொருட்களை பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்கித் தவசம் வைத்திருந்த ஒருவரும் இந்த நால்வரில் அடங்குகிறார். 


கொள்ளைச் சம்பவங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட துருப்பிடிக்காத உருக்கினால் செய்யப்பட்ட மன்னா கத்தி மற்றும் திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 


இதில் ஒரு மோட்டார் சைக்கிள் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் புலத்சிங்கள பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏனைய சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இரவு நேர சோதனை பணியின் போது ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தொடர் குற்றச் செயல்கள் அம்பலமாகியுள்ளன. 


ஹொரணை நவம் மகா பெரஹெர தினத்தில், இவர்கள் ஹிக்கடுவ பகுதியில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளனர். 


பின்னர் அந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மாற்றி கஹதுடுவ, கும்புக, கோனபொல மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கைபேசிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேகநபர்கள் இன்று (23) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹொரணை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »