Our Feeds


Tuesday, February 24, 2026

Zameera

பேராதனை புகையிரத பால புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

 



மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரம்புக்கனை மற்றும் கடுகண்ணாவை இடையிலான புகையிரத பாதையை சீரமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித திட்டமும் இல்லை எனவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 


ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், மண்சரிவினால் சேதமடைந்த மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தை புனரமைக்க அரசாங்கம் தலையிட்டு புதிய இரட்டைப் பாலமொன்றை அமைக்க முதலில் முன்மொழிந்த போதிலும், பின்னர் பழைய பாலத்தையே மீண்டும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 


அத்துடன், 2026 ஏப்ரல் மாதத்தில் கண்டி வரையான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. 


எனினும், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) அரசாங்கத்தின் தலையீட்டின் பேரில் புனரமைப்புப் பணிகளில் இணைந்திருந்தாலும், அவர்களால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் புகையிரத பொறியியல் தொழில்நுட்பக் குழுவினால் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 


இதன் காரணமாக, இப்பாலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மீண்டும் ஒரு அறிக்கையைக் கோருவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும், தற்போதைய புகையிரத பொது முகாமையாளரின் சில செயற்பாடுகளே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படக் காரணம் என அச்சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 


புகையிரத பொது முகாமையாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 


புகையிரத திணைக்களம் இலாபமடைவதாகக் காட்டுவதற்காக, புகையிரத சேவைகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க தற்போதைய பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 


திணைக்கள அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாமை மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஆலோசனைகளை பொது முகாமையாளர் செவிமடுக்காமை காரணமாக, தற்போதைய அரசாங்கம் அபகீர்த்திக்கு உள்ளாவதுடன் புகையிரதப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 


பாதைகளை மீண்டும் புனரமைப்பதில் இவ்வாறான நிர்வாகச் சிக்கல்கள் பாரிய தாக்கத்தை செலுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


எனவே, புகையிரத சேவையை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கு, புகையிரத திணைக்களத்தில் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள பொறியியலாளர்களான முன்னாள் பொது முகாமையாளரைக் கொண்ட குழுவொன்றை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அச்சங்கம் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »