Our Feeds


Thursday, February 19, 2026

Zameera

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்


 தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, வீதியோரங்களில் உள்ள கட்டாக்காலி நாய்கள் கடித்ததால் அல்லாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந்நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாய்கள், பூனைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள் போன்ற விலங்குகள் கடிப்பதன் மூலம் பரவும் நீர்வெறுப்பு நோயானது ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது.

சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதற்கமைய, நாட்டில் வருடமொன்றுக்கு 250,000 முதல் 300,000 வரையான நாய் கடி சம்பவங்கள் மாத்திரம் பதிவாகின்றன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்:

"நீர்வெறுப்பு நோய் நூற்றுக்கு நூறு வீதம் ஒரு கொடிய மரணத்தை ஏற்படுத்தும் நோயாகும். உலகளாவிய ரீதியில் கூட மிகச் சிலரே நீர்வெறுப்பு நோயிலிருந்து உயிர் பிழைத்துள்ளனர். நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், மர அணில்கள், மரநாய்கள், கீரிப்பிள்ளைகள், மாடுகள், குதிரைகள் என இந்த எந்தவொரு விலங்கு கடித்தாலும் இது பரவலாம்."

"விலங்குகளின் மூளை மாதிரிகளைப் பரிசோதிக்கும் போது பூனைகளிடையே நீர்வெறுப்பு நோய் அதிகரித்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது. பூனை கடி சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. குறிப்பாகக் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. பூனை கடி தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பூனையின்  கீறல், அது கடிப்பதற்குச் சமமான அளவு ஆபத்தானது."

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »