Our Feeds


Friday, February 27, 2026

Zameera

அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து அதிகாரிகள் விலக தீர்மானம்


 கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். 


நிவாரண மதிப்பீடுகளுக்கான முறையான சுற்றுநிருபங்கள் இல்லாமை, வாக்குறுதி அளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். 


இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் குமார, டித்வா நிவாரணச் செயல்முறைக்கு இதுவரை முறையான பொறிமுறை ஒன்று இல்லை எனக் குறிப்பிட்டார். 


இதன்படி, இதில் நேரடியாக ஈடுபட்டுள்ள நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் சங்கங்கள் மற்றும் சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து, இந்த நிவாரணப் பணிகளை முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். 


எவ்வாறாயினும், டித்வா அனர்த்தம் இடம்பெற்று 95 நாட்கள் கடந்துள்ள போதிலும், அனர்த்த நிவாரணப் பணிகளைச் சரியாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தால் இதுவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனத் தெரிவித்த அவர், அதற்கமைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் கூறினார். 


இதன்போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் குமார, 


இனி எங்களுக்குச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை தேவையில்லை என நாங்கள் ஜனாதிபதியிடம் கூறுகின்றோம். செயலாளர்களுடன் பேசி அந்த கோரிக்கைகளை முன்வைத்து முடித்துவிட்டோம். எனவே, எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, வழிகாட்டல் ஆலோசனைகள் தயாரிக்கப்படும் வரை மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்கும் வரை இன்று முதல் அனைத்து கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் டித்வா நிவாரணப் பணிகளிலிருந்து முழுமையாக விலகுகிறோம். எனத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »