பங்களாதேஷில் பேருந்தொன்றில் ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷின் பத்மா ஆற்றைக் கடப்பதற்கு படகு போக்குவரத்துதான் பிரதானமாகும். பேருந்துகள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் கூட படகுகளின் மூலமாக ஆற்றைக் கடந்து சென்று மீண்டும் வீதிப் பயணத்தை தொடர்கின்றன.
இந்நிலையில் நேற்று (25) மாலை 40 பயணிகளுடன் வந்த பேருந்தொன்று படகில் ஏறி ஆற்றைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
அவர்களுள் 23 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளனர்.
சில பயணிகள் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
குறித்த பேருந்தை மிதவைப் பாலத்தின் வழியாக படகில் ஏற்ற முயன்றபோது மற்றொரு சிறிய ரக படகு மிதவைப் பாலத்தில் மோதியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
