Our Feeds


Wednesday, March 25, 2026

Zameera

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகள் நீக்கப்படவுள்ளன


 கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. 

அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்தச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது, வழக்குகளை முன்னெடுக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர விளக்கமளித்தார்.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்குத் தடயப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதற்குமான அனைத்து வழிகளையும் அடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரின் தலையீட்டுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார். 

அத்துடன், இச்செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை, திருத்தங்களுடன் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »