Our Feeds


Wednesday, March 18, 2026

Zameera

போர் சூழல் தீவிரமடைந்தால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


 (எம்.மனோசித்ரா)


அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து எரிபொருள் மற்றும் நிலக்கரி விநியோகம் முற்றாகத் தடைப்பட்டால், நாட்டில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவது சவாலாக அமையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலையில் மின் துண்டிப்பு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் 25 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஏப்ரல் மாத இடைப்பகுதியில் 25 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாகவே 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி அவசர கொள்வனவு செய்யப்படவுள்ளது.


நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. எவ்வாறிருப்பினும் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரம் எமது உணவு தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. இந்தியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கப்பல் போக்குவரத்தின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படும்.


திருகோணமலை எண்ணெய் குதங்களை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் எமது எரிபொருள் களஞ்சிய திறனும் அதிகரிக்கப்படும்.


தற்போது மின் துண்டிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை. எனினும் போர் சூழல் விரிவடையும் தன்மையின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும். அமெரிக்க - ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து, எரிபொருள், நிலக்கரி விநியோகம் முற்றாக தடைபட்டால் 24 மணித்தியால தடையற்ற மின் விநியோகம் குறித்து எவராலும் எதிர்வுகூற முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »