Our Feeds


Wednesday, March 4, 2026

Zameera

எரிபொருள் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை


 ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற   அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஐக்கிய  மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


 அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையை அரசாங்கம்  என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்குள் மற்றும் நெருக்கடி நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில்  முகாமைத்துவ செய்ய முடியும்.


எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ  அல்லது தாமதமோ ஏற்படாது. நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.எரிபொருள் விநியோக கட்டமைப்பு  தொடர்பில்  அச்சமூட்டி மக்களை தவறாக  வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.


இறக்குமதி செய்யப்படும் மசகு  எண்ணெய் தொகையை சுத்திகரித்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை. திருகோணமலை  எண்ணெய் தாங்கிகளில் இலங்கைக்குச் சொந்தமான தாங்கிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. அப்பகுதியில் மேலதிகமாக இரண்டு எண்ணெய் தாங்கிகளை  நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு  வழங்காமலிருந்திருந்தால்  தேவைக்கு மேலதிகமான வகையில் எண்ணெய் தொகையை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »