(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நிலக்கரி கொள்வனவு மோசடி மூலம் நாட்டுக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகுவார் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாக வந்த இவர்கள், எந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டாலும் பதவி விலகுவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு மூலம் அரசாங்கத்துக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகுவார் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. அவரின் வெட்கம் என்ற நரம்பு பெலவத்தையால் துண்டித்திருக்கிறது. அதனால் அவருக்கு தொடர்ந்து இந்த அமைச்சுப்பதவியில் இருக்க முடியும்.
அத்துடன் இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அப்போது இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு திருடர்கள் என குற்றச்சாட்டு தெரிவித்தபோது, அந்த அமைச்சர்கள் அமைச்சுப்பதவியில் இருந்து விலகினார்கள். ரவி கருணாநாயக்க, திலக்மாரபன்ன ஆகியோருக்கு எதிராக அன்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் அமைச்சுப்பதவியை துறந்தார்கள். ஆனால் சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாக வந்த இவர்கள், எந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டாலும் பதவி விலகுவதில்லை. மாறாக ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் அமைச்சரை பாதுகாக்கவே முற்படுகிறார்கள்.
அத்துடன் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தற்போது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு எவ்வாறு இருந்தாலும், அவர் உர கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருக்கும்போது மேற்கொண்ட மோசடிக்கு எதிிராக குற்றச்சாட்டு ததெரிவிக்கப்பட்டு, தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு விசாரணை முடியும்வரையாவது அமைச்சர் இந்த அமைச்சுப்பதவியில் இருந்து விலகி இருக்கவேண்டும். அதனையும் செய்யவில்லை.
அத்துடன் நிலக்கரி கொள்வனவில் நட்டம் ஏற்பட்டிருந்தால் அதனை திறைசேரியில் இருந்தும் ஒரு பகுதியை மின்கட்டணத்தில் இருந்தும் மற்றும் வழக்கு நடவடிக்கைகளின் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
திறைசேரியின் பணம். மின்கட்டண அதிகரிப்பு, வழக்கு விசாரணைக்காக செலவிடும் பணம் அனைத்தும் மக்களின் பணமாகும். ஜனாதிபதியும் தனது அமைச்சரின் தவறை மறைத்து, ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
மேலும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் கணக்காய்வு அறிக்கையை தயாரிக்கும்போது, கோப்குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு பல தடவைகள் சென்று, இது தொடர்பில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். கோப் குழு தலைவருக்கு எவ்வாறு அதனை செய்ய முடியும்.? அதேநேரம் அரச கணக்காய்வாளர் நாயகம் வெற்றிடமாகி இருந்தபோது, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதற்கு அரசாங்கத்துக்கு 8மாதத்துக்கும் அதிக காலம் சென்றது.
அவர்களுக்கு தேவையான ஒருவரை நியமிப்பதற்கே முயற்சித்து வந்தார்கள். ஏனெனில் இந்த வருடம் ஜனவரியில் இருந்து அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான கணக்காய்வுகள் ஆரம்பிக்கப்படுவதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தாேம். அதனைப்படையிலே தற்போது நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதா இல்லையா என கேட்கிறோம் என்றார்.
