ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது.
ஈரானியக் கொடியுடன் பயணித்த இந்தச் சரக்குக் கப்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் 'USS Spruance (DDG-111)' என்ற அமெரிக்கப் போர்க் கப்பல் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இக்கப்பலுடன் சேர்த்து, ஈரானில் இருந்து புறப்பட்ட சுமார் 10 கப்பல்கள் இதுவரை அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக விதிக்கப்பட்ட கடற்படைத் தடைகள் அமுலாகி இன்றுடன் மூன்று நாட்கள் நிறைவடைகின்றன.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, ஈரான் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே இந்தத் தடையின் நோக்கமாகும்.
இந்த நடவடிக்கையில் 10,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், 12 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஈரானுடன் தொடர்பில்லாத ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
