Our Feeds


Tuesday, April 14, 2026

SHAHNI RAMEES

பேச்சுவார்த்தை நிராகரிப்பு: "போர்க்களமே பதில் சொல்லும்" என ஹிஸ்புல்லா தலைவர் எச்சரிக்கை!

 

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இஸ்ரேலிய

மற்றும் லெபனான் தூதுவர்களுக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் முற்றாக நிராகரித்துள்ளார்.


நேற்று திங்கட்கிழமை தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், லெபனான் அரசு இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது ஒரு "வீணான முயற்சி" எனச் சாடியதுடன், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்குவதே இந்தப் பேச்சுவார்த்தையின் மறைமுக நோக்கம் எனத் தெரிவித்தார்.


எமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது தெரிந்தே இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏன் செல்ல வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், லெபனான் அரசு இதனைப் புறக்கணிப்பதன் மூலம் ஒரு வரலாற்று ரீதியான முடிவை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


மேலும், ஒருபோதும் சரணடையப் போவதில்லை எனவும், வட இஸ்ரேலிய பகுதிகள் இனி எப்போதும் பாதுகாப்பாக இருக்காது எனவும் எச்சரித்த நயீம் காசிம், லெபனான் தரைப்படை மற்றும் காவல்துறையினரைக் கொண்டு ஹிஸ்புல்லாவை ஒடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டினார்.


இதேவேளை, கடந்த மார்ச் மாதம் முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 165 சிறுவர்கள் மற்றும் 87 மருத்துவப் பணியாளர்கள் உட்பட 2,055 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுமார் 1.2 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தெற்கு லெபனானின் முக்கிய நகரமான 'பின்ட் ஜுபெய்ல்' பகுதியை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்துள்ள லெபனான் பிரதமர் நவாப் சலாமின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெய்ரூட் நகரில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது அந்த நாட்டில் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »