கைது செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துப்பாக்கியைக் காட்டி நபரொருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியா பகுதிக்கு வருகை தந்திருந்த போது, அவிசாவளையிலிருந்து சுற்றுலா வந்திருந்த குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அவர் தன்னிடம் இருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியைக் காட்டி அந்தக் குழுவினரை அச்சுறுத்தியதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும், சந்தேகநபரிடமிருந்த துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் 2025 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
