கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையில்
சேவையில் ஈடுபடும் "மீனகயா" புகையிரதத்தில், குடிநீர் போத்தலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (28) ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.நிர்ணயிக்கப்பட்ட விலையின்படி, 1,000 மில்லி லீற்றர் (1 லீற்றர்) குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகும். இருப்பினும், குறித்த வியாபாரி அதனை 160 ரூபாய்க்கு விற்பனை செய்து, பயணிகளிடம் மேலதிகமாக 60 ரூபாயை அறவிட்டுள்ளமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி ஒருவர், சாதாரண பயணி போல வேடமணிந்து புகையிரதத்தில் பயணம் செய்தபோது, குறித்த வியாபாரியிடம் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை வாங்கி இந்த விதிமீறலை உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்தே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பயணிகளைச் சுரண்டும் வகையில் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்ததைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், இந்தத் தண்டப்பணத்தை விதித்துத் தீர்ப்பளித்தது.
